×

ஜெயலலிதா சினிமாவுக்கு தடைகோரி தீபா வழக்கு: இயக்குனர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை:  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கவுதம் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஐதராபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்த்தன் இந்தூரி என்பவர் திரைப்படம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்கவும், இந்தியில் ஜெயா என்ற பெயரில் திரைப்படம் எடுக்கவும்  தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கு நேற்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் வாதிட்ட வக்கீல் தியாகேஷ்வரன், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்கு தெரியும் என்றும் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்க கூடாது.இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம். ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனது, அனுமதியில்லாமல் இந்த திரைப்படத்தை தயாரிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நவம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் இந்தி படத்தயாரிப்பாளர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி ஆகியோருக்கு உத்தரவிட்டார்.



Tags : For Jayalalithaa Cinema Prohibition Deepa Case ,Deepa ,Directors , Jayalalithaa, Cinema,Deepa ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...