‘‘உலகில் வாழும் உயிரினங்களில் அதிமுக்கியமானது தேனீ...’’
என்று அடித்துச் சொல்லியிருக்கிறது ‘எர்த் வாட்ச் இன்ஸ்டிடியூட்’டின் சமீபத்திய ஆய்வு. இதை விஞ்ஞானிகளும், உயிரியல் வல்லுநர்களும் ஆமோதிக்கின்றனர். ‘‘தேனீ கடித்தால் நமக்கு வலிக்க மட்டுமே செய்யும். ஆனால், அந்த தேனீக்கள் காணாமல் போய்விட்டால் அது கடித்து ஏற்படும் வலியைவிட பெரிய சோகமே மனித இனத்துக்கு நிகழும். 90% தேனீக்கள் அழிந்துவிட்டன. மீதமிருக்கும் தேனீக்களையாவது காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது...’’ என்கிறது அந்த ஆய்வு.
‘‘ஒருவேளை தேனீக்கள் அழிந்துவிட்டால், மனித இனம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழாது...’’ என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இப்போது பலரும் பரிசீலித்து வருகின்றனர். இதுபோக உலகளவில் நடக்கும் விவசாயத்தில் 70% தேனீக்களைச் சார்ந்தே இருக்கிறது. தேனீக்களால் நிகழும் மகரந்தச் சேர்க்கையால்தான் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
தவிர, தேன் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல வழிகளில் மனிதனுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படி நிறைய காரணங்களை அடுக்கி உலகின் முக்கிய உயிரினமாக தேனீயை முன்மொழிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
த.சக்திவேல்