×

சாதிக்க துடிக்கும் பெண்கள் வர்க்கத்திற்கு கருமுட்டையை உறையவைக்கும் முறை வரப்பிரசாதம்; மகப்பேறு மருத்துவர்கள் உறுதி

பெண்கள் தங்கள் வேலை மற்றும் லட்சியத்தில் கவனம் செலுத்தி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும், வலுவாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். எனவே குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தி, குழந்தையை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்ளவேண்டுமென்பதில் முக்கியத்துவம் கொடுத்து அதற்காக உழைக்கிறார்கள். ஒரு நபரின் ‘பயாலஜிக்கல் கிளாக்’ என்பது இதில் ஒரு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது அல்லது சிக்கல் ஏற்படும் என்ற சூழல் இருந்தது. ஆனால், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் முன்னேற்றங்களும், வளர்ச்சியும் இத்தகைய சவால்களை எளிதில் எதிர்கொள்ளவும் அதற்கான தீர்வுகளை வழங்கவும் உதவியாக இருக்கிறது.

உதாரணமாக கருமுட்டைகளை உறைய வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்வுகள் இதற்காக இருக்கின்றது. பொதுவாகவே குழந்தைகளை தாமதமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டையை, மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறைய வைக்கலாம். அறிவியல்பூர்வமான ‘ஊசைட் கிரையோபிரிசர்வேஷன்’ (Oocyte Cryopreservation) என்பது இதன் பெயர். இது கருமுட்டைகளை உறைய வைப்பது என்று குறிப்பிடப்படுகிறது. இதில் முட்டைகளை உறையவைக்க, ஒரு பெண்ணுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டு அவருடைய ஓவரீஸ் தூண்டி விடப்படும். இதன் மூலமாக குறிப்பிட்ட அளவிலான முட்டைகள் ஒரு பெண்ணின் கருப்பையில் உருவாகும். அவை கருப்பையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் ஒரு பெண்ணோ அல்லது ஒரு தம்பதியோ இப்போது எனக்கு குழந்தை வேண்டாம், நான் தேவைப்படும் பொழுது இந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறுபவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற இந்த முறை உதவியாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெண்களுடைய மாதவிடாய் தாமதமாகும் அல்லது நிற்கும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள், கருத்தரிப்பதில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவேதான் பல நடிகைகளும் தங்களுடைய 30 வயதில் கருமுட்டைகளை உறைய வைக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம்பெண்கள் தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். கருமுட்டைகளை ஆய்வகங்களில் சோதித்து, தரமானவற்றை மட்டுமே பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உதவுவதன் மூலம் பிறக்கும் குழந்தைக்குப் பிறவிக் கோளாறுகளோ, மரபணுசார்ந்த பரம்பரை நோய்களோ இல்லாமல் தவிர்க்க இந்த உத்தி உதவும் என்று பல மருத்துவ ஆய்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.

சோதனைக் குழாய் முறை
கருப்பைக்கு வெளியே கருத்தரிப்பு ஏற்படுத்தும் உத்திகளைப் பல ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டார்கள். அவ்வாறு உருவாகும் சிசுக்கள் சோதனைக்குழாய் சிசுக்கள் என்று அழைக்கப்பட்டன. பெண்ணின் கருவணுவகத்திலிருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின் விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்தக் கரு முட்டைக்குள் புகுத்தி அதைச் சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது. அந்தக் கருவை ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின் அல்லது மற்றொரு பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம் கழித்து முழுக் குழந்தையாக வெளிப்படும்.

கருப்பையில் கோளாறு அல்லது வேறு வகை உடல்நலக் குறைபாடு உள்ள பெண்கள் குழந்தைப் பேறு பெற்று மகிழ இந்த சோதனைக் குழாய் உத்தி உதவியிருக்கிறது. ஏதாவதொரு காரணத்தால், கருவைப் பத்து மாதங்களுக்குத் தன் வயிற்றில் சுமக்க முடியாத நிலை மனைவிக்கு ஏற்படுமானால், உறையவைக்கப்பட்ட கருவை வேறொரு பெண்ணின் கருப்பையில் பதித்து பத்து மாதங்களுக்குப் பிறகு முழுக் குழந்தையாகப் பெற்றெடுக்க வைக்கலாம். அவ்வாறு மேலை நாடுகளில் பல தம்பதிகள், உடல்நலமுள்ள பெண்ணின் கருப்பையில் தமது குழந்தைகளை வளர்த்து, பெற்றுக்கொள்கிறார்கள். தாய்லாந்து போன்ற நாடுகளில் கருப்பையை வாடகைக்கு விடுவது ஒரு தொழிலாகவே நடக்கிறது.

மாதம் ஒரு கருமுட்டைதான்
பெண்ணின் கருவணுவகத்தில் மாதம் ஒரு கருமுட்டைதான் உருவாகும். எனவே, அவளுக்கு ஹார்மோன்களை ஊட்டி ஒரே சமயத்தில் நிறைய கருமுட்டைகள் உருவாகும்படி செய்கிறார்கள். பின்னர், அவற்றை வெளியில் எடுத்து அவை குறைகளின்றியும் நல்ல வளத்துடனும் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னர், நான்கைந்து கருமுட்டைகளைத் தேர்வு செய்வார்கள். அவற்றை ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்துக் கருத்தரிக்க வைப்பார்கள். பிறகு, பெண்ணின் விருப்பத்துக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு கரு முட்டைகளை அவளுடைய கருப்பையில் வைத்து வளர விடுவார்கள். 1986ல் கிறிஸ்டோபர் சென் என்ற ஆஸ்திரேலிய மருத்துவர், பெண்ணின் கருத்தரிக்காத முட்டைகளைக்கூட உறையவைத்துப் பாதுகாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இதனால் தேவைப்படும்போது விந்தணுவுடன் சேர்த்துவைத்துப் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும்.

கருவுற்ற முட்டைகளை உறைய வைப்பதைவிடக் கருவுறாத முட்டைகளை உறையவைப்பது அதிக சிக்கலானது. கருமுட்டை என்பது மிக நுண்ணிய ஒற்றைச் செல். உறையவைக்கும்போது அல்லது உறைந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கும்போது சேதப்பட வாய்ப்புண்டு. சரியான நேரத்துக்கு உறைய வைக்க வேண்டும். அதன் உள்ளே இருக்கும் திரவம் உறைந்து கட்டியாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டியானால், செல் கட்டமைப்பு குலைந்துவிடும். கருமுட்டைக்குள்ளிருக்கும் திரவத்தின் நீர்க்கூறை எடுத்துவிட்டு, வேறு சில ரசாயனங்களை அதற்குப் பதிலாகப் புகுத்தி அந்தத் திரவம் கட்டியாகாமல் தடுக்கப்படுகிறது. கருமுட்டைகளின் எண்ணிக்கையைக் கூட்ட ஹார்மோன் சிகிச்சையளிக்கும்போது தாயின் கருப்பை உட்புறச்சுவர் தடித்துவிடும். அதன் காரணமாகப் பெண்ணுக்குத் தாய்மை ஏற்படாமல் போகலாம்.

ஹார்மோன் சிகிச்சையால் ஏற்பட்ட விளைவுகள் மறையும்வரை சினைப்படுத்தப்பட்ட கருமுட்டையை உறையவைத்துப் பாதுகாத்து, அதற்குப் பிறகு அந்தக் கருமுட்டையை அவளுடைய கருப்பையில் பதித்து வளரச் செய்யலாம். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் விந்தணுக்களைச் சேமிக்கும் வங்கிகளும் சில நாடுகளில் உள்ளன. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆணழகர்கள் போன்றோரின் விந்தணுக்களைச் சேமித்து வைத்து, தேவைப்படுவோருக்கு விற்கும் வர்த்தகம்கூடச் சில நாடுகளில் நடைபெறுகிறது. மகப்பேறு மருத்துவர் சாந்தி ரவீந்தரநாத் கூறுகையில், கருமுட்டையை உறையவைக்கும் முறை இன்று நேற்று வந்தது அல்ல. பத்து பதினைந்து வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் இந்த காலக்கட்டத்தில் தான் இதற்கான தேவை அதிகரித்து இருக்கிறது. மக்கள் பலரும் இதனை இப்போது பேசி வருகிறார்கள்.

முதன்முதலில் வெளி நாடுகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது இது சாத்தியமா என பலரும் கேட்டார்கள். ஆனால், அறிவியல் வளர்ச்சியால் சாத்தியமாகி வெற்றியும் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் கருப்பையில் பாதிப்பு இருந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருப்பவர்கள், கேன்சர் பாதிப்புக்குள்ளானவர்கள் சிகிச்சைக்கு முன்னர் தங்கள் கருமுட்டைகளை உறையவைத்து பின்னர் தங்களுக்கான குழந்தைகளை பெறுக்கொண்டனர். ஆனால், தற்போது சாதிக்க நினைக்கும் பெண்கள், தங்கள் அடையாளத்திற்காக உழைக்கும் பெண்கள் பலரும் குழந்தைகள் பெற்றெடுப்பதை தள்ளிப்போட நினைத்து இதனை செய்கிறார்கள். திருமணம், குழந்தைகள் என்று வந்தாலே பெண்களின் கனவுகள் சிதைந்து விடுவது மறுக்கமுடியாத உன்மைதான்.

அதையும் மீறி சாதிக்க வேண்டும் என பெண்கள் நினைத்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்கள் லட்சியத்தால் பிற்காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இதனை செய்கிறார்கள். அறிவியலின் இந்த வளர்ச்சி பெண்களுக்கு வரப்பிரசாதம். இயற்கையாகவே பெண்களுக்கு 37 வயதிற்கு பிறகு ஹார்மேன் மாற்றத்தால் கருமுட்டை உருவாகுவதில் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால்தான் தங்களின் 30 வயதில் கருமுட்டைகளை உறைய வைக்கிறார்கள் என்றார்.

கருமுட்டைகளை உறையவைத்த இந்திய பிரபலங்கள்
* இந்திய மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா
* புகழ்பெற்ற தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்
* முன்னாள் உலக அழகி டயானா ஹெய்டன்
* பிரபல பாலிவுட் நடிகை மோனா சிங்
* நடிகை மற்றும் மாடல் தானி குப்தா

* நடிகை ரிச்சா சதா
* பாலிவுட் நடிகை நேகா தூபியா
* நடிகை மற்றும் மாடல் மெஹ்ரீன்
* பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா
* நடிகை மற்றும் தொகுப்பாளர் மந்திரா பேடி
* சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்
* நடிகை சபா கரீம் கான்

The post சாதிக்க துடிக்கும் பெண்கள் வர்க்கத்திற்கு கருமுட்டையை உறையவைக்கும் முறை வரப்பிரசாதம்; மகப்பேறு மருத்துவர்கள் உறுதி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...