×

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்த தந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்தார்: சகோதரியிடம் உடல் ஒப்படைப்பு

சென்னை: மனநிலை பாதிக்கப்பட்ட மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தந்தையும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சென்னை ஆழ்வார்பேட்டை ஆழ்வார் தெருவை உள்ள திருவேணி அடுக்குமாடி குடியருப்பை சேர்ந்தவர் விஸ்வநாதன்(82). சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வெங்கட்ராம்(44) என்ற  மகன் இருந்தார். இதற்கிடையே விஸ்வநாதன் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு விஸ்வநாதன் தனது மகனை தனியாக பார்த்து வந்தார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் விஸ்வநாதன் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் கடந்த வியாழக்கிழமை இரவு  விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது, படுக்கை அறையில் அழுகிய நிலையில் விஸ்வநாதன் மகன் வெங்கட்ராம் இறந்து கிடந்தார். அதன் அருகே விஸ்வநாதன் மயக்க நிலையில் உயிருக்கு  போராடி கொண்டிருந்தார்.

உடனே போலீசார் விஸ்வநாதனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஸ்வநாதன் தனது வயது மூப்பு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட மகனை பார்த்து கொள்ள முடியாமல், அதிகளவில் தூக்க மாத்திரைகளை  மகனுக்கு உணவில் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். பிறகு தானும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.இதற்கிடையே ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதனும் நேற்று உயிரிழந்தார். அதைதொடர்ந்து இருவரின் உடலும் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை மும்பையில் வசித்து வந்த  விஸ்வநாதனின் சகோதரி மீனாட்சியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : sister ,death , father , died , treatment, surrender, sister
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...