ஆலந்தூர்: ஆலந்தூர் எம்.கே.சாலையில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் டில்லிபாபு (39). மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய இவர், ஒழுங்கீன நடவடிக்கையால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இவரது மனைவி உமா மகேஷ்வரி (37), வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், டில்லிபாபு வண்ணாரப்பேட்டையில் பணிபுரிந்தபோது, அங்குள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த உமா மகேஷ்வரி, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் அந்த பெண் மீது புகார் அளித்தார்.
போலீசார், டில்லிபாபுவையும், அந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால், அதன் பிறகும் அவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்தது. உமா மகேஷ்வரி பணிக்கு சென்ற பிறகு, டில்லிபாபு தனது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றி அறிந்த உமா மகேஷ்வரி, கணவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டில்லிபாபு, மனைவி உமா மகேஷ்வரியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். இதுபற்றி உமா மகேஷ்வரி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து டில்லிபாபுவை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.