×

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் : வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை :தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  தமிழகம், தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா  பகுதிகளில் வட கிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது.இதனால் நேற்றும் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.  இந்நிலையில் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்துள்ளது,ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது என்பதை குறிப்பிட்டார்.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் காவிரி டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறினார். குறிப்பாக குமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச மழைப்பதிவு


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 12 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் வேதச்சந்தூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 


Tags : Puducherry ,Tamil Nadu , Northeast, Monsoon, Meteorological Center, Delta, Heavy Rain, Fishermen, Warning, Balachandran
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...