சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளி மற்றும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் 17 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 30 கோடி ரொக்க பணம் சிக்கியது. நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், நீட்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. நீட்தேர்வு பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதற்கு முறையாக வருமான வரித்துறையில் கணக்கு காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, கடந்த இரண்டு நாட்களாக தனியார் பள்ளி மற்றும் பள்ளி இயக்குனர்கள், நீட்தேர்வு பயிற்சி மையங்கள் உட்பட 17 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு எந்த வகையில் நடந்துள்ளது என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பயிற்சி மையத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளி ஆடிட்டோரியத்தில் உள்ள ரகசிய லாக்கரில் ₹30 கோடி ரொக்க பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், ₹150 கோடி அளவுக்கு வருமானம் கணக்கில் காட்டப்படாததற்கான ஆவணங்கள் சிக்கியதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.