மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் செய்யப்பட்ட பின்னர், மும்பை புறநகர் மாவட்டத்தில் இதுவரை, ₹9.54 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பறக்கும் படைகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் இந்த பறக்கும் படைகளை அமைத்தது. இந்த பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மும்பை புறநகர் மாவட்டத்தில் மட்டும் பறக்கும் படையினர் இதுவரை ₹9.54 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கைப்பற்றியுள்ளனர். காந்திவலி, கோரேகாவ், போரிவலி, வர்சோவா, டி.என்.நகர் ஆகிய போலீஸ் நிலையங்களின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இவை கைப்பற்றப்பட்டன. இவை தவிர பொது சொத்துக்களை சீர்குலைப்பு செய்த குற்றத்திற்காக 3 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குரார், விலேபார்லே மற்றும் காட்கோபர் போலீஸ் நிலையங்களில் இந்த எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் இடையே சட்டவிரோதமாக பெருமளவில் மது கடத்தி செல்லப்பட்ட காரின் உரிமையாளர் மீது, மலாட் போலீஸ் நிலையத்தில் மற்றுமொரு எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.