தாம்பரம்: சீன அதிபர் ஜின் பிங் வருகிற 11ம் தேதி தமிழகம் வருகிறார். மாமல்லபுரத்தில் 11 மற்றும் 13ம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியுள்ளவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள விடுதியில் போலீசார் சோதனை செய்தபோது, சேலையூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் திபெத் நாட்டை சேர்ந்த 2 மாணவர்கள், அதே நாட்டை சேர்ந்த 6 பேருடன் தங்கி இருப்பது தெரிந்தது.
சீன அரசு திபெத் நாட்டில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, வெளிநாடுகளில் வசிக்கும் திபெத் நாட்டினர் சீன அதிபர் வெளிநாடு சுற்றுப் பயணங்களில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, தமிழகம் வரும் சீன அதிபருக்கு எதிராக திபெத் நாட்டினர் ஆர்ப்பாட்டம் நடத்த கூடும் என்பதால், இவர்களை பரங்கிமலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, சீன அதிபர் வருகைக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.