* உற்சாக டூர் வந்த ஏழை மாணவர்களின் உருக்கமான பேட்டி
சென்னை: கிராமங்களில் இருந்தபோது வானத்தில் விமானம் பறந்தால் ஏதோ வெள்ளை காகம் பறப்பது போன்று பார்ப்போம். இப்போது விமானத்தில் பறந்து வந்தது மகிழ்ச்சியை அளித்தது என்று ஏழை மாணவர்கள் கூறினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் இயங்கிவரும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து அங்குள்ள அரசு பள்ளியில் படிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தும் சிறந்து விளங்கும் 20 மாணவ- மாணவிகளை தேர்வு செய்தனர். அந்த மாணவர்கள், அவர்களுடைய ஊரில் எப்போதாவது வானில் விமானம் பறப்பதை பார்த்தவர்கள். அவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து இங்குள்ள உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிக்காட்ட முடிவு செய்தனர். அதன்படி அவர்களை சிவகாசியிலிருந்து சொகுசு பஸ்சில் மதுரைக்கு அழைத்து வந்தனர். பின்பு மதுரையில் இருந்து தனியார் விமானம் மூலம் அழைத்து வந்தனர். அந்த விமானம், நேற்று காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. அவர்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். மாணவர்கள் உற்சாகமாக தாங்கள் வந்திருக்கும் இடம் விமான நிலையம் என்பதையும் மறந்து உற்சாகமாக கத்தியபடி வந்தனர். விமான நிலைய அதிகாரிகளால் அவர்களது உற்சாக குரலை தடுக்க முடியவில்லை. ஆனாலும் அதிகாரிகள் குழந்தைகளை அன்புடன் அனுமதித்தனர்.
மாணவர்கள் பேட்டி : நாங்கள் எங்கள் கிராமங்களில் விமானம் வானில் பறப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அதுவும் வானில் ஏதோ வெள்ளைக்காகம் பறந்ததுபோல் மிகவும் சின்னதாகவே இருக்கும். அந்த வாய்ப்பும் எங்களுக்கு எப்பொழுதாவது தான் கிடைக்கும். ஆனால் அதற்கே நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் இன்று எங்களை தனியார் தொண்டு நிறுவனம் சிவகாசியில் இருந்து சொகுசு பஸ்ஸில் மதுரை அழைத்துவந்து மதுரையில் இருந்து மெட்ராஸுக்கு விமானம் மூலமாக அழைத்து வந்துள்ளோம். விமானம் வானில் பறந்தபோது வானத்தில் மிதந்ததுபோல் உற்சாகமாக இருந்தது. விமானத்தில இருந்து இறங்கி மெட்ராஸ பாக்க வந்தோ... இங்க மெட்ராஸ்ல பீச்சு, தீம்பார்க் பாத்துட்டு சாய்ந்தரம் 6.40 மணிக்கு திருப்பியும் விமானத்துல மதுரைக்கு போறோம் என்றனர் உற்சாகமாக.