ஈரோடு: நூல் விலை ஏற்றம் இறக்கமாக இருப்பதால், கடந்த சில மாதங்களாக விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நூல் விலை ஏற்ற இறக்கத்தை சரி செய்து நிலையான விலையில் நூல் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு அருகே சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 2.40 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சங்க செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: சித்தோடில் மட்டும் 3,000 தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன்படி தினமும் 2.40 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு விசைத்தறி கூடத்துக்கு தினமும் ₹8 ஆயிரத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர், நேரடி தொழிலாளர்கள், நூல்வார்ப்பிங், சைசிங், இயந்திர இயக்கம், ஆட்டோ, வேன், தார் போடுபவர் என 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர்.
இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.