கும்பகோணம்: கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் மார்க்கெட் அருகில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சொந்தமான மல்லுக குளத்தை , அந்த பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன் குத்தகைக்கு எடுத்து அதில் மீன்கள் வளர்த்து வந்தார். தற்போது ஒவ்வொரு மீனும் ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை வளர்ந்த நிலையில் விரைவில் மீன்களை பிடித்து விற்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை சண்முகம் குளத்திற்கு வந்தபோது மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. இதனால் சண்முகம் அதிர்ச்சி அடைந்தார்.
தற்போது குளத்தில் 1 டன் அளவுக்கு மீன்கள் இருந்ததாகவும் அவை அனைத்தும் செத்து விட்டதாகவும், இதனால் ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாவும் கூறிய சண்முகம், யாரோ குளத்தில் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார். குளத்தில் விஷம் கலந்ததால் மீன்கள் செத்ததா அல்லது குளத்தில் கழிவு நீர் கலந்து மாசு ஏற்பட்டு மீன்கள் செத்ததா என கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.