மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14ம் நூற்றாண்டை சார்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்தவர் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான். இவர், உடல்நிலை சரியில்லை என்று ராஜினாமா செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆதீனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவருக்கு வழங்கப்பட்ட காவி உடை மற்றும் ருத்ராட்சம் உள்ளிட்ட சைவ சின்னங்கள் பறிக்கப்பட்டன. மேலும், காவி உடை இல்லாமல், வெள்ளை உடையில் கட்டளைத்தம்பிரான் இருக்கும் புகைப்படமும் ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கட்டளைத்தம்பிரான், மீண்டும் காவி உடைஅணிந்தபடி, ஆடியோ ஒன்றை வாட்ஸ்அப்பில் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில், கடந்த 15ம் தேதி என்னை ஆதீன மடத்திற்கு அழைத்து 5 வெள்ளைவேட்டிகள் புடைசூழ தன்னை கட்டாயப்படுத்தி காவிஉடையை பறித்துக்கொண்டு வெள்ளை உடையை தரிக்கச்செய்து வெளியேற்றியதாக குற்றம்சாட்டி பேசியிருந்தார். இது குறித்து, திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிகர் நேற்று ஆதீன மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,‘பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டளைத்தம்பிரான், ஈரோட்டை சேர்ந்தவர். அவரது பழைய பெயர் சுப்பையா, தீட்சை பெறுவதற்கு முன்பே ஊமை பெண்ணை திருமணம் செய்தவர். விவாகரத்து செய்யாமலேயே அவ்வப்போது வீட்டிற்கு சென்று வந்தார். கடந்த 15ம் தேதி அவரை வரவழைத்து மந்திர கஷாயங்களை அகற்றி அவரை வெளியேற்றினோம். மீண்டும் காவி உடைஅணிந்துள்ளது தவறு என்றார்.