சென்னை: இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர் பணிக்கு நுழைவுத்தேர்வை நடத்த உள்ளதாக ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்கரபூதே பேசினார். சென்னையில் நேற்று நடந்த உயர்கல்வி தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்கரபூதே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கருத்தரங்கில் அவர் பேசிதாவது: இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய படிப்புகளை கொண்டு வர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரே படிப்பான பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ்) என்ற படிப்பை தொடங்க உள்ளோம்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக முடிவு எடுக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் 21ம் தேதி நடைபெற உள்ள இருக்கிறது. கூட்டத்தில் அளிக்கப்படும் பரிந்துரைகளின்படி, புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர். இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியராக இருப்பதற்கு ஒரு புதிய ஆன்லைன் படிப்பை அமல்படுத்த உள்ளோம். ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற இந்த தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். இவ்வாறு அனில் சகஸ்கரபூதே பேசினார்.