சென்னை: சென்னை நீலாங்கரையில் பிடிபட்ட தீவிரவாதி அசத்துல்லாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியது. ஆஜர்படுத்திய பிறகு அசத்துல்லா ஐதராபாத் அழைத்து செல்லப்பட்டான். புத்த மத தலைவர் தலாய்லாமா-வை வெடிகுண்டு வைத்து கொள்ள முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வங்காளதேச அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அசத்துல்லா சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னை நீலாங்கரையில் கட்டிட தொழிலாளியாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஷேக் அசதுல்லா என்ற தீவிரவாதியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பௌத்தர்களின் புனித இடமாக போற்றப்படும் பீகார் மாநிலம் புத்தகயாவில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் வெடிக்காத நிலையில் 2 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
அப்போது, அங்கு திபெத் தலைவர் தலாய் லாமா தங்கி இருந்தார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த வருடம் முழுவதும் தீவிர விசாரணையில் இறங்கியிருந்தார்கள். அவரை கொள்ள நடத்தப்பட்ட சதி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதில் தொடர்புடைய ஜமாத் உல் முஜாஹிதீன் ஆப் பங்களாதேஷ் என்ற இயக்கத்தை சேர்ந்த 7 பேரை இந்திய புலனாய்வு முகமை கைது செய்தது. இந்த நிலையில், ஐதராபாத்தில் தீவிரவாதத்திற்கு ஆள் சேர்ப்பு செய்த முக்கிய குற்றவாளி நசீர் ஷேக் என்பவரை பீகார் என்.ஐ.ஏ கைது செய்தது. மேலும் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜமாத் உல் முஜாஹிதீன் ஆப் பங்களாதேஷ் என்ற அமைப்பை சேர்ந்தவன் என்பதும், அவன் பலருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.
நசீர் ஷேக் அளித்த தகவலின் பேரில் நீலாங்கரையில் வைத்து ஷேக் அசதுல்லா என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியில் இருந்து கட்டிட தொழிலாளி போல் நடித்து இங்கு பதுங்கியிருந்தார். மேலும் அசதுல்லா-விடம் தேசிய முகமை அதிகாரிகள் மற்றும் நீலாங்கரை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து ஆயுத பயிற்சி பெற்ற பலர் சிக்குவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அசதுல்லா-வை மீண்டும் பீகாருக்கும், ஹைதராபாத்திற்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, அசதுல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். இதையடுத்து, அசதுல்லா பீகாருக்கு அழைத்து செல்லப்பட்டான்.