சென்னை: கோயில் பெயரை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக நன்கொடை வசூலித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, நன்கொடை, டிக்கெட் வசூல் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துதான் கோயில்களில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோயில்களின் பெயரை தவறாக பயன்படுத்தி அபிஷேக வழிபாட்டு குழு என்ற பெயரிலும் மற்றும் பல்வேறு குழுக்கள் பெயரிலும் ஒவ்வொரு திருவிழா காலங்களிலும், விசேஷ நாட்களிலும் அபிஷேகம் செய்வதற்கென்றும், விழா நடத்துவதற்கென்றும் தனித்தனியே பணம் படைத்தவர்களிடம் சென்று கோயில் பெயரை பயன்படுத்தி நன்கொடை பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிபாட்டு குழு என்ற பெயரிலும் மற்றும் பல்வேறு குழுக்கள் பெயரிலும் அபிஷேக காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், ஒவ்வொரு திருவிழா காலங்களிலும், விசேஷ நாட்களிலும் அபிஷேகம் செய்வதற்கென்றும், விழா நடத்துவதற்கென்றும் தனித்தனியே பணம் படைத்தவர்களிடம் சென்று கோயில் பெயரையும், செயல் அலுவலர் பெயரையும் தவறாக பயன்படுத்தி உபயம், நன்கொடை அளிக்க வலியுறுத்துவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. கோயிலில் அபிஷேக குழு சங்கம், அமைப்பு போன்ற பெயர்களில் பக்தர்களிடம் வசூல் செய்து அபிஷேகம் செவதும், பொதுமக்களிடம் கோயில் பெயரை கூறி கோயில் வருவாயை தடுக்கும் நோக்கில் நன்கொடை வசூல் செய்வது அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு புறம்பானது ஆகும். எனவே, அவ்வாறு செயல்படும் விபரம் தெரிய வந்தால் அவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை விதிகளின் படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்கள்,பொதுமக்கள் உபயமாக தரும் காணிக்கைகளை கோயில் அலுவலகத்தில் நேரிடையாக செலுத்தி ரசீது பெற்று கொள்ளுமாறும், குழு, சங்கம் அமைப்பு போன்ற தனிப்பட்ட அமைப்பிடம் பணம் மற்றும் காணிக்கைகளை கொடுத்து ஏமாற வேண்டும். கோயில் விழாக்கள்,உற்சவங்கள்,அபிஷேகங்களை நடத்துவதற்கு கோயில் மூலம் எந்த ஒரு நபர், குழுவோ நியமிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக, ஒவ்வொரு கோயில் வளாகங்களிலும் அறிவிப்பு பலகை வைக்க அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுரை வழங்கியுள்ளார்.
