அம்பத்தூர்: அம்பத்தூர் சிவானந்தா நகரை சேர்ந்தவர் ஹேமலதா (35), இவரது கணவர் பாபு. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த ஹேமலதா, தனது 15 வயது மகன் கமலேஷ் உடன் வசித்து வந்தார். கமலேஷ், அம்பத்தூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு வீட்டில் திடீரென துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் சிறுவனுடன் படிக்கும் சக மாணவர்கள், கமலேஷ் 2 முறை தேர்வில் தோல்வி அடைந்ததால், வகுப்பு ஆசிரியர் நீ படிக்காத தண்டம், நீ இருப்பதை விட சாவதே மேல், நின்று திட்டினார். இதனால் தான் கமலேஷ் தற்கொலை செய்து கொண்டான் என தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் தாய் ஹேமலதா மற்றும் உறவினர்கள் நேற்று அரசு பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, பெற்றோர் திட்டியதால் தான் அந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
