திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் உள்பட வடமாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் ஜூன் முதல் வாரம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த வருடம் 1 வாரம் தாமதமாக மழை தொடங்கியது. அதோடு எதிர்பார்த்த அளவும் பெய்யவில்லை. கடந்த 2 வாரத்தில் வழக்கமாக பெய்வதை விட 31 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கடம் மழைக்கான ‘ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.