சென்னை: போக்குவரத்து போலீசார் சார்பில் ‘ஜிசிடிவி-சிட்டிசன் சர்வீஸ்’ செயலி அறிமுகம் செய்த ஒரு வாரத்தில் சாலை விதிகளை மீறியதாக 102 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிகாப் மொபைல் செயலி அறிமுகம் விழா நேற்று நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்,தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகவர்வால், தினகரன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிசிடிஎன்எஸ் சேவையுடன் இணைக்கப்பட்ட புதிய டிஜிகாப் மொமைல் செயலியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் சேவையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் பேசியதாவது: சென்னை பெருநகரத்தை பொறுத்தவரை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றங்களை தடுப்பது மற்றும் கண்டுபிடிப்பதில் முன்னோடியாக உள்ளோம். ‘ஜிசிடிபி-சிட்டிசன் சர்வீஸ்’ என்ற மொபைல் செயலி கடந்த 7ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்து தொடர்பான அனைத்து விதிமீறல்களும் புகைப்படம் எடுத்து பதிவு ஏற்றம் செய்யலாம். காவல் துறையினர் தவறு செய்தாலும் அதை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி இந்த செயலியின் மூலம் வந்த புகாரின்படி 102 காவல் துறையினர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக பல வகைகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அதேபோல் பொதுமக்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிகாப் வெர்ஷன் -2 பொதுமக்களுக்கு பயன்படக் கூடியதாக உள்ளது. இதில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம். ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்யலாம். வழக்கின் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தனார்.
டிஜிகாப் மொபைல் மூலம் புகார் செய்தோர் விவரம்
செயலியின் பயன்பாடு பிப்ரவரி 6 முதல்
ஜூன் 14 வரை
செயலியை பதிவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை 72,155
செயலியில் செல்போனின் ஐஎம்இஐ எண்களை பதிவு செய்தோர் 4,086
செல்போன் திருட்டு பற்றி
புகார் அளித்தோர் 8,311
செயலி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் எண்ணிக்கை 1,227
பைக் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணிக்கை 151