×

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து சபாநாயகரின் கார் டிரைவர் கைது

பல்லாவரம்: அடுக்கு மாடி குடியிருப்பில் மின் மோட்டாரை இயக்கியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் கார் டிரைவர் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் (40). இவர், தமிழக சபாநாயகரின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மோகன் (30) என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் வராததால், குடியிருப்பு வளாகத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அங்கு வந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், ‘‘தண்ணீர் இல்லையென்று நீ எப்படி தன்னிச்சையாக மோட்டாரை இயக்கலாம்,’’ என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த மோகனின் மனைவி சுபாசினி (28), ‘‘எப்படி எனது கணவரை அடிக்கலாம்,’’ என்று கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், ‘‘நான் யார் தெரியுமா, என்னையே எதிர்த்து பேசுவியா,’’ என்று கேட்டு ஆபாச வார்த்தைகளில் திட்டியதுடன், தனது வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுபாசினி முகத்தில் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த சுபாசினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவரது தாடையில் 6 தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆதிமூல ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சவுண்ட் பார்ட்டி
குடியிருக்கும் பகுதியில் ஆதிமுல ராமகிருஷ்ணன், ‘‘நான் சபாநாயகரின் கார் டிரைவர். எனக்கு தலைமை செயலகத்தில் செல்வாக்கு அதிகம். என்னை கேட்டுவிட்டு தான் முதல்வரே காரை எடுப்பார்,’’ என்று அனைவரிடமும் தெரிவித்து வந்துள்ளார். மேலும், அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம், தனது குரலை உயர்த்தி பேசி, உயர் அதிகாரி போல் நடந்துகொள்வார், என்று கூறப்படுகிறது.



Tags : car driver , The teenager, the knife, the speaker's car driver, was arrested
× RELATED விபத்தில் வாலிபர் பலி கார் டிரைவருக்கு ஓராண்டு சிறை