மும்பை: பாஜ எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் நேற்று மும்பை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உட்பட 7 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையில் ஆஜராகாமல் இருந்த பாஜ எம்.பி.யான பிரக்யாவுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.விசாரணையின்போது நீதிமன்ற சாட்சிகள் கூண்டில் தூசி படிந்து இருந்ததால், அதில் இருக்கையில் அமர பிரக்யா சிங் தாக்கூர் மறுத்துவிட்டார். உணவு இடைவேளைக்கு பின்னர் நீதிபதி மீண்டும் வந்தபோது, அவரிடம், ‘‘மனிதாபிமான அடிப்படையில், சாட்சி கூண்டுக்கு அருகே இருக்கை போட சொல்கிறேன். உட்காருகிறீர்களா அல்லது தொடர்ந்து நிற்கிறீர்களா?’’ என்று கேட்டார். ஆனால், தனக்கு தூசி அலர்ஜி இருப்பதாகவும், இதனால் நின்று கொண்டே இருப்பதாகவும் கூறி, விசாரணை நடந்த இரண்டரை மணி நேரமும் நின்றுக் கொண்டே இருந்தார்.