×

விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை

ஜம்மு: பூஞ்ச்சில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படை 2வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட்டுக்கு விமான படை வீரர்கள் நேற்றுமுன்தினம் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ஷாசித்தார் என்ற இடத்தில் வந்த போது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில், 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், சிகிச்சை பலனன்றி வீரர் விகாஸ் பகாடே வீரமரணமடைந்தார்.தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க காவல்துறையினருடன் சேர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்றுமுன்தினம் முதல் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ராணுவ கமாண்டோ படை வீரர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில்,‘‘ தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர்.

ஷாசித்தார்,குருசாய், சனாய் உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்கிறது’’ என்றனர். கூடுதல் டிஜிபி ஆனந்த் ஜெயின்,ராணுவ மற்றும் உளவு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பலரை ராணுவம் பிடித்து விசாரித்து வருகிறது.

இதற்கிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ‘‘அரசியல் சட்டம் 370 வது பிரிவினால் தான் தீவிரவாதம் அதிகரித்தது என பாஜ அரசு தெரிவித்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின்னும் அது ஓயவில்லை. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே உள்ள பனிப்போர் இருக்கும் வரை இது முடிவுக்கு வராது’’ என்றார்.

The post விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu ,Poonch ,Air force ,Surankot ,Dinakaran ,
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...