மும்பை: வெளிநாட்டு கரன்சியை ஆன்லைனில் வாங்கும் வசதி விரைவில் வர இருக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வௌிநாடு செல்பவர்கள் அந்நாட்டு கரன்சியை அப்போதைய சந்தை மதிப்பை விட ஒரு சதவீதம் முதல் 3 சதவீதம் வரை கூடுதலாக கொடுத்து வாங்குகின்றனர். எந்த இடத்தில் கரன்சியை மாற்றுகிறார்களோ அதற்கேற்ப பண மாற்று மதிப்பு வேறுபடுகிறது. இந்த நிலையில், வெளிநாடு செல்லும் மக்கள், வர்த்தகர்கள் உட்பட அனைவரும் குறைந்த விலையில் வாங்குவதற்கான வசதியை கிளியரிங் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. தற்போது இது பரிசோதனையில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த வசதி அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்நிய செலாவணி பண மாற்றுக்கான இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று, 2017ம் ஆண்டிலேயே ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்திருந்தது. சந்தை மதிப்பில் வெளிநாட்டு கரன்சியை மாற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பிரத்யேக இணையதளத்தை இவ்வாறு உருவாக்குவதன் மூலம், விற்பனையில் போட்டி ஏற்பட்டு குறைந்த கமிஷனில் கரன்சியை மாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித்தரும். இந்த இணையதளத்தில் இவ்வளவு மதிப்பிற்காவது கரன்சியை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன. அந்நிய செலாவணி வர்த்தகர்கள் மற்றும் வங்கி துறையினர் கூறுகையில், இந்த இணையதளத்தில் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.