கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று ஆஜரானார். மேற்கு வங்கத்தில் சாரதா சிட் பண்ட் நிறுவனம் பொது மக்களின் முதலீட்டை ரூ.2.500 கோடி அளவில் சுருட்டி மோசடியில் ஈடுபட்டது. இந்த வழக்கின் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் இருந்தார். அப்போது, இந்த மோசடியில் பல ஆதாரங்களை அழிக்க, ராஜிவ் குமார் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தொடர்ந்து வந்தார். அவருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவாக இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, அவரை ஜூலை 10ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என சிபிஐ.க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ராஜிவ் குமார் நேற்று ஆஜரானார்.