×

ஓட்டப்பிடாரம் உட்பட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

நெல்லை: தமிழகத்தில் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19ம்  தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (17ம் தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற  தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர்  நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்,  தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி,  திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த  மாதம் 9ம் தேதி அறிவித்தது. இந்த 4 தொகுதிகளில் திமுக, அதிமுக,  அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டப்பிடாரத்தில் 15 பேர், சூலூர் தொகுதியில் 22 பேர்,  திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேர், அரவக்குறிச்சியில் 63 பேர் என மொத்தம் 137 பேர்  போட்டியிடுகிறார்கள்.

ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்.30, மே 1, 2 ஆகிய தேதிகளில் முதல் கட்ட பிரசாரத்திலும், மே 14ம் தேதி 2ம் கட்ட பிரசாரத்திலும் ஈடுபட்டார். தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் ெசய்தனர். அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஒட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து 2 கட்ட பிரசாரம் செய்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டார். மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள். வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட இந்த 4 தொகுதிகளிலும் வருகிற 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. இதை முன்னிட்டு நாளை (17ம் தேதி) மாலை 6  மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில்  ஈடுபட்டு வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை அரவக்குறிச்சியில்  தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதையே மிஞ்சும் வகையில் பிரசாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

வெளியூர் வாசிகளுக்கு தடை


நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர் வெளியூர்களில் வந்து ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் தங்கியிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வதால் தொகுதி வாசிகள் தவிர வெளியூரைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் அனைவரும் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : assembly constituencies ,Ottapidam ,Leaders , by-election, campaign,
× RELATED திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான...