குமரி: கோட்சே குறித்து கமல்ஹாசன் கூறிய உண்மை பாஜகவுக்கு கசக்கிறது என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின்போது பேசிய கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியது சர்ச்சையை கிளப்பியது. கமலின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருவதாகவும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண அரசை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குழுவுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.