×

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு தாசில்தார்கள் சர்வே செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருபுறமும் உள்ள இடங்களை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பூர் மற்றும் அயனாவரம் தாசில்தார்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வீனஸ், பெரவள்ளூர், ஜவஹர் நகர்,  பெரியார் நகர், கொளத்தூர் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன. இந்த சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளும், ஏராளமான வழிபாட்டு தலங்களும் உள்ளன. தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன.  பாதசாரிகள் கூட செல்ல முடியாத அளவில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது.  கடந்த 1986ல் இந்த சாலையை 70 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதுவரை சாலை  விரிவாக்கம் செய்யப்படவில்லை. தற்போது சாலை 40 அடிக்கும் குறைவாக உள்ளதால் இருபக்கமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலையை விரிவாக்கம் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கும்,  மாவட்ட கலெக்டருக்கும் உத்தரவிட வேண்டும் என கோரி செம்பியம் திருவிக நகரை சேர்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2012ல் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி அமல்படுத்தவில்லை. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் மீது வில்லியம் மோசஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 6வது மண்டல துணை கமிஷனர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது 6வது மண்டல துணை கமிஷனர், மண்டல பொறியாளர்கள் ஆஜராகினர். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி சாலையின் இருபக்கமும் பட்டா இடங்கள் உள்ளன. இதுகுறித்து அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பு வக்கீல் டி.எஸ்.ராஜமோகன் ஆஜராகி அந்த பட்டாக்களில் பெரும்பான்மையானவை போலி பட்டாக்கள். நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேப்பர் மில்ஸ் சாலையின் இருபுறமும் உள்ள இடங்களை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பூர் மற்றும் அயனாவரம் தாசில்தார்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2ம் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perambur Paper Mills Road Agreement Tailaltar ,High Court , Perumpur,Paper Mills Road ,Aggression, High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...