பெங்களூரு: பெங்களூரு தெற்கு தொகுதி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிகே ஹரிபிரசாத்துக்கு ஆதரவாக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மஜத எம்எல்சி டிஏ ஷரவணா உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். இதையொட்டி நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி பேசுகையில், “மாநில பிரச்னையை மக்களவையில் எழுப்பி அதற்கு தீர்வு காணும் சக்தி பிகே ஹரிபிரசாத்துக்கு இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதியாகும் வாய்ப்பை பெங்களூரு தெற்கு தொகுதி மக்கள் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திரமோடிக்கு அதானி, அம்பானி போன்றவர்களே நண்பர்கள். அது போன்ற நண்பர்களின் நலனில் மட்டுமே அக்கறையுடன் செயல்படுவார். செல்வந்தர்களின் சொத்துகளை பாதுகாப்பதே அவரின் லட்சியம். ஏழை எளிய மக்களின் நலனில் சிறிதளவும் அவருக்கு அக்கறை கிடையாது. மாநில கூட்டணி அரசு ரூ.40 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரம் பிரதமர் நரேந்திரமோடி அரசு கடந்த ஐந்தாண்டில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகள், ராணுவ வீரர்கள் பெயரில் வாக்குகள் சேகரித்தார்.
அதற்கு பதில் மாநிலத்திற்கு செய்த உதவிகளை கூறி வாக்குகள் ஏன் சேகரிக்கவில்லை? கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அளித்த நன்மைகள் என்ன? என்பதை கூறியிருக்கலாம். மாநிலத்தி–்ற்கு எதையும் செய்யாத மோடி மக்களை ஏமாற்றும் வகையில் பிரசாரம் செய்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பிகே ஹரிபிரசாத், பெங்களூரு மத்திய தொகுதியின் வளர்ச்சிக்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த மாநிலத்திற்கு உகந்த திட்டங்கள் கிடைப்பதற்கும் உதவியாக இருப்பார் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி