பெங்களூரு: ‘கர்நாடகாவை சேர்ந்த இன்ஜினியர் ஜெர்மனியில் கொலை செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் பசரூர் (49). இவரது மனைவி சுமிதா (43). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. இன்ஜினியரான பிரசாந்த், ஜெர்மன் நாட்டின் முனீச் பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 18 ஆண்டாக ஜெர்மனியில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் இவர்களை வழிமறித்து கத்தியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமிதா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரசாந்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த சுமிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள் ஜெர்மனிக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த சுமிதா, அவரது 2 குழந்தைகள் பத்திரமாக மீட்டு வரப்படுவார்கள்’என்று கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி