சென்னை: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் மீது திருவள்ளூர் மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள், அதிமுக, அமமுக உட்பட பல்வேறு கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அமமுக வேட்பாளர்களுக்காக அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆவடியில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், செவ்வாப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் அமமுக திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு அளிக்கும் வகையில், கட்சி கொடிகளுடன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதாக அவர் மீது, செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சக்தி விநாயகமூர்த்தி புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டி, 143, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். கடந்த வாரம் சேலத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக பிரசாரம் செய்ததாக 5 போலீஸ் நிலையங்களில் டிடிவி.தினகரன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி