×

தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு..!

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த பிப்ரவரி 26ம் தேதி அறிவித்தார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடந்தது. மார்ச் 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,998 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் 3,585 ஆண் வேட்பாளர்களும்,  பெண் வேட்பாளர்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் இருவரும் களத்தில் உள்ளனர். இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்கும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதமாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். மேலும், இந்த கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தனர். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, அமித்ஷா, ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.வாசன், நட்டா, யோகி ஆதித்ய நாத், ஸ்மிருதிராணி உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர். இப்படி ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் அந்தந்த கட்சி தலைவர்கள் ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்தனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்ந்தது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட வேண்டும். வீடுவீடாக சென்று ஏப்ரல் 6ம் தேதி வரை வாக்கு கேட்க கூடாது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தற்போதுடன் தொகுதியை காலி செய்துவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்தி சம்பந்தம் இல்லாத நபர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருகிற 6ம் தேதி (நாளை மறுதினம்) தமிழகத்தில் 234 தொகுதியிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா நோயாளிகள் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து பிபிகிட் உடை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மதியத்திற்கு மேல் தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு என தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல குழுவினர் கொண்டு வந்து, பொருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்….

The post தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு..! appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,puducherry ,flying ,Chennai ,Puducherry, Tamil Nadu ,Anal Flying ,Tamil Nadu, Puducherry ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்