×

உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

* விஷம் குடித்தவருக்கு தீவிர சிகிச்சை * திடீர் சாலை மறியலால் பரபரப்பு

சென்னை: சென்னை அடுத்த உத்திரமேரூர், திருப்புலிவனம் பகுதியில் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆண்டு விழா மற்றும்  விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அப்போது முதல் ஆண்டு மற்றும் 2வது ஆண்டு மாணவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டதில் 2ம் ஆண்டு படிக்கும் ரோகித், நரேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே சகமாணவர்கள் இருவரையும் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  இருவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் பார்ப்பதற்காக மற்றொரு கல்லூரி நண்பரான குப்பைநல்லூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) என்பவர் மருத்துவமனை வந்தபோது எதிர்தரப்பினர் தாக்கியதில் அவரும் படுகாயம் அடைந்தார்.  இதன் பின்னர், அதே மருத்துவமனையில் சஞ்சய் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் சஞ்சய் புகார் அளித்தும் போலீசார் எதிர் தரப்பினர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் சஞ்சய், நேற்று காலை  வயல்வெளிக்கு சென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். தகவலறிந்து கிராம மக்கள் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று காலை கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உத்திரமேரூர் அரசு மருத்துவமனை அருகே செங்கல்பட்டு சாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் விரைந்து வந்து, கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confrontation ,college students ,village ,Uttiramerur , Tirupulivanam,ttiramerur, Confrontation, college ,students
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...