வேளச்சேரி: சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 1004 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டுக்கு இயக்கி வைத்து பேசியதாவது: சென்னையில் அடுத்த 10 நாட்களில் 50 மீட்டருக்கு ஒன்று வீதம், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவுபெறும். முன்பு வாரத்திற்கு 5 செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்தன. சிசிடிவி கேமராக்கள் பொருத்திய பின், 2 மாதத்திற்கு ஒரு செயின் பறிப்பு சம்பவமாக குறைந்துவிட்டது. அதிலும், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த 2 விபத்து மரணங்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கொலை வழக்காக பதிவு செய்து, உண்மை கண்டறியப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஆதாரத்துடன் பிடிபடுவதால், அப்பாவிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. காவல் துறையினரின் எல்லை மீறும் செயல் வெளிச்சத்திற்கு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிதி உதவிய சமூக ஆர்வலர்கள், காவல்துறையினரை கமிஷனர் கவுரவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி