கோவை: சென்னையில் இருந்து மங்களூருக்கு தினமும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் இரவு 8 மணிக்கு கோவை ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். அதேபோல் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. கோவை பீளமேடு பயணியர் மில் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனே சுதாரித்து கொண்ட இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோது தண்டவாளத்தில் யாரோ இருசக்கர வாகனத்தின் டயரை வைத்திருந்தது தெரிந்தது. இதில் ரயில் மோதியதில் ஒரு பெட்டியின் கீழே இருந்த ஏர்டியூப் உடைந்தது.
சிறிது நேரத்தில் ஏர்டியூப் சரி செய்யப்பட்டு, ரயில் புறப்பட்டது. இதனால் கோவைக்கு இரவு 8 மணிக்கு வர வேண்டிய ரயில் 45 நிமிடம் தாமதமாக வந்து புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் இரு சக்கர வாகன டயரை வைத்து, ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக் கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி