சென்னை: ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காக்கவாக்கம், தொளவேடு, பருத்திமேனி குப்பம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள தச்சூர் கூட்டுசாலையில் இருந்து ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலை, வட மதுரை, சென்னங்காரணை, தொளவேடு, போந்தவாக்கம், பென்னலூர்பேட்டை, வழியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி, சித்தூர் வரை 128 கி.மீட்டர் தூரத்திற்கு 3200 கோடி ரூபாய் மதிப்பில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதியில் தமிழகம் மற்றும் ஆந்திர அரசு இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனி குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நேற்று நில எடுப்பு தாசில்தார் குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் 6 வழிச்சாலைக்காக அளவீடு செய்து மஞ்சள் நிற அளவு கல்லை நட்டனர்.
இதையறிந்த விவசாயிகள் அதிகாரிகளிடம், ‘எங்களுக்கு 6 வழிச்சாலை தேவையில்லை என்று எழுதி கொடுத்து வந்து விட்டோமே, பின்னர் ஏன் இப்போது நிலத்தை அளவு செய்ய வந்தீர்கள்’ என கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலையில் மறியலில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால், அளவீடு செய்ய வந்தவர்கள் பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு திரும்பி சென்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தச்சூர் கூட்டுசாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழிச்சாலையாக ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஏற்கெனவே மனு கொடுத்துள்ளோம். ஆனால், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை.. இனியும் நில எடுப்பு பணி தொடர்ந்தால் கருப்பு கொடி உள்ளிட்ட பல்வேறு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி