சென்னை: தமிழக அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை ஒரே நாளில் முடக்க முடியும் என நடிகர் விஷால் கூறினார்.தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்த பிறகு தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் செய்தியாளர்களிடம் கூறியது:இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததற்காக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். இந்த விழாவில் பங்கேற்க திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். சிலர் வராமல் போனது அவர்களின் தனிப்பட்ட முடிவு. வாரம்தோறும் புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிடும்போது, ஹாலிவுட் படங்களை விட தமிழ் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பது உள்பட தமிழ் சினிமா நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். திரையுலகம் கடவுளாக நம்புவது தமிழக அரசைத்தான்.
அரசு நினைத்தால், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க முடியும். ஆபாச இணையதளங்களை ஒரேநாளில் முடக்க முடிகிறது. அதேபோல் இதையும் ஒழிக்கலாம். அரசு பஸ்களில் கூட புதிய படங்கள் திரையிடுகிறார்கள். இதைத் தடுக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். திருட்டு சிடி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் மீது இயக்குனர் வசந்தபாலன் புகார் கூறியிருப்பது பற்றி கேட்கிறீர்கள். நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம். திருட்டு சிடி தயாரித்த ஒருவரையாவது அவர் பிடித்துவிட்டு, ‘நான் செய்தேன் நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பேன். நடிகர் சங்க கட்டிட வேலைகள் நடந்து வருகிறது. ஜூலையில் புதிய கட்டிடம் திறக்கப்படும். இவ்வாறு விஷால் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி