புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரபேல் விவகாரம் குறித்தும் கருத்து தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் பாஜவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது” என்று கூறியிருந்தார். நிதின் கட்கரியின் இந்த கருத்து மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “கட்கரிக்கு பாராட்டுக்கள். பாஜவில் துணிச்சலோடு இருக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். ரபேல் ஊழல், அனில் அம்பானி, விவசாயிகளின் கவலை மற்றும் நிறுவனங்களின் அழிவு குறித்தும் தயவு செய்து உங்களது கருத்துக்களை கூறுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் நிதின் கட்கரியின் கருத்து குறித்த செய்தியையும் இணைத்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி