×

சோலார் நிறுவன மேலாளர் சரமாரி வெட்டிக் கொலை

சென்னை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுப்பையாபுரம் பகுதியில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமான சோலார் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் தியாகராஜன் (53) என்பவர் ேமலாளராக பணியாற்றி வருகிறார். ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கிருஷ்ணன் (40)  அலுவலக உதவியாளராகவும், வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே நிலம் வாங்கியதில்  சிலரது நிலங்கள் அபகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்நிலையம், தாலுகா அலுவலகங்களுக்கு பலமுறை புகார் வந்துள்ளது.நேற்று காலை தியாகராஜன், அலுவலக பணி காரணமாக கயத்தாறில் இயங்கி வரும் என்எல்சி நிறுவனத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை முதல் மாலை 3 மணி வரை, தியாகராஜனை தேடி மாஸ்க் அணிந்த ஒருவர் 4, 5 முறை வந்து காவலாளியிடம் கேட்டு சென்றுள்ளார். மாலை 4 மணியளவில் தியாகராஜன் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாதபடி முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த 6க்கும் மேற்பட்டோர் வந்து, தியாகராஜன் அலுவலத்திற்குள் திடீரென புகுந்து அவரை சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து, தலையில் பலத்த வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க முயன்ற உதவியாளர் கிருஷ்ணனின் தலையிலும் வெட்டினர். அப்போது எதிரே வந்த வாலிபரையும் வெட்ட முயன்றனர். அவர் கையெடுத்து கும்பிட்டதால் கும்பலைச் சேர்ந்த ஒருவர், வாலிபரை விட்டுவிடும்படி கூறிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் கிருஷ்ணனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான தியாகராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post சோலார் நிறுவன மேலாளர் சரமாரி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Solar Enterprise ,Varamari Wettikyku ,Chennai ,Supaiapuram ,Alangulam, South Kasi district ,Solar ,Enterprise ,Manager ,Chamari Wettikku ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...