×

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை கையாள்வதில் அதிருப்தி நீதித்துறையில் நெருக்கடிநிலையை பிரகடனம் செய்ய நேரிடும்: அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை கையாளும் மாநில அரசின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் நீதித்துறை நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்ய  வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அரசாணையை  ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்து ஓய்வுபெற்ற பொன்மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஓராண்டு காலத்திற்கு நியமித்தும் உத்தரவிட்டது. அவருக்கு தேவையான வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு சென்னையில் அலுவலகம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கிண்டியில் உள்ள  அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டு உள்ளதாகவும், அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் இருப்பதாகவும் சிறப்பு அதிகாரி கடந்த விசாரணையின்போது நீதிபதிகளிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்ைக விசாரித்த நீதிபதிகள், புகாரை மனுவாக உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யமாறு பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு சிறப்பு அதிகாரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் திருச்சியில்  அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் கேம்ப் அலுவலகமும் உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் அவருக்கு தரப்பட்டது. ஆனால், அவர் அலுவலகத்தை பூட்டி சாவியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் ஒப்படைத்து விட்டார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய  அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார்.அப்போது, சிறப்பு அதிகாரி, கடந்த 6 ஆண்டுகளாக சென்னை அலுவலகத்தில் தான் பணியாற்றி வந்தேன். ஓய்வு பெற்ற பிறகு தன்னை சந்தித்த ஆய்வாளர் கேட்டுக் கொண்டதால்தான்  அவரிடம் சாவியை ஒப்படைத்தேன் என்றார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதம் வருமாறு:  கூடுதல் அட்வகேட் ஜெனரல்:  சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளை,  தங்கள் பிரிவுக்கு திரும்பும்படி சிறப்பு அதிகாரி அறிவுறுத்தி இருக்கிறார். ஓய்வு பெற்றுள்ள அவருக்கு பணியிட மாற்றம் செய்ய  அதிகாரம் இல்லை.நீதிபதிகள்: ஓய்வு பெற்ற டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா? கூடுதல் அட்வகேட் ஜெனரல்: டிஜிபி தற்போது பணி நீட்டிப்பில் உள்ளார். ஓய்வு பெற்று பணி நியமனம் பெறுவதற்கு, பணி நீட்டிப்புக்கும் வித்தியாசம் உள்ளது. நீதிபதிகள்: இந்த நீதிமன்றம் நியமித்த ஒரு அதிகாரிக்கு தேவையான வசதிகளைச் செய்து தரமுடியவில்லை. இதனால் கடந்த 40 நாட்களாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை மாநில அரசு கையாளும் விதம் முறையாக  இல்லை. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் தேவைப்பட்டால் இந்த வழக்கில் நீதித்துறை அவசரநிலை (நெருக்கடி நிலை) பிறப்பிக்க நேரிடும்.கூடுதல் அட்வகேட் ஜெனரல்: அரசிடம் உரிய தகவலைப் பெற்று பதில் மனு தாக்கல் செய்கிறேன் என்றார்.இந்த காரசார விவாதத்திற்கு பிறகு நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில்  தருமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crisis ,government ,HC , Disappointment, statue-smuggling ,crisis ,judiciary
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...