பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் (திமுக) பேசியதாவது: இந்த மன்றம் சர்வ வல்லமை படைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த மன்றத்திற்குள் வர முடியும். சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர யாரும் உள்ளே நுழைய முடியாது. விழாக் காலங்களில் மட்டுமே முதல்வர் முடிவுக்கு ஏற்ப மற்றவர்கள் வரமுடியும். அதையும் மீறி யாராவது வந்தால் சபாநாயகர் அவர்களை தண்டிக்கவும், சிறைச்சாலைக்கு அனுப்பவும் முடியும். அந்த அளவுக்கு சர்வ வல்லமை படைத்தவர் சபாநாயகர். நீதிமன்றங்கள் கூட அவரை தட்டிக்கேட்க முடியாது. இதுபோன்ற கண்ணியம் மிக்க இந்த அவையில் மன்றத்தின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் நீங்கள்தான் பொறுப்பு.
கவர்னர் உரை படிக்க வரும்போது மட்டுமே சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர முடியும். வேறு சில மாநிலங்களில் கூட சபாநாயகர் இருக்கையில் கவர்னர் கூட உட்கார முடியாது. நான் 1971ம் ஆண்டு முதல் இந்த சபையில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2ம் தேதி கவர்னர் உரை படிக்க இந்த சபைக்கு வந்தபோது உங்களது இருக்கையில் கவர்னர் அமர்ந்து உரை படித்தார். ஆனால் உங்களுக்கு இணையான ஒரு நாற்காலியில் கவர்னரின் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அமர்ந்திருந்தார். இது இந்த அவையின் மாண்பை குறைக்கும் செயல். உங்களுக்கு இணையாக உட்காரும் அதிகாரம் யாருக்கும் இந்த அவையில் இல்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாருக்கும் தலைவராக உள்ள தலைமை செயலாளர் கூட உட்கார முடியாது. ஆனால், ஒரு ஐஏஎஸ் அதிகாரி எப்படி உட்கார வைக்கப்பட்டார். நான்பட்ட வேதனையை உங்களிடம் சொல்கிறேன். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை இனி நல்லவையாக இருக்கட்டும். நடந்தவற்றை மறப்போம். அப்போது, சபாநாயகர் தனபால் கூறுகையில், ‘‘எனக்கு இருக்கிற தனிப்பட்ட அதிகாரத்தை நீங்கள் (துரைமுருகன்) ெதரிவித்ததற்கு எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு பிரச்னை இல்லை. கவர்னர் வரும்போது அவருக்கு உதவிக்காக அவரது செயலாளர் அவைக்கு வருவது மரபு. மன்றத்தில் பிரச்னையை கொண்டு வந்து இருக்கிறீர்கள். எதிர்காலத்தில் இது எப்படி கையாளப்பட வேண்டுமோ அப்படி கையாளப்படும்’’ என்றார்.
இதற்கு முன்பு இருந்த ஆளுநர்கள் தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற வரும்போது, அவரது செயலாளர்கள் தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் வரிசையில்தான் அமர்வார்கள். ஆனால், கடந்த 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவையில் உரையாற்ற வந்தபோது, அவரின் தனி செயலாளர் ராஜகோபாலுக்கு ஆளுநர் இருக்கை அருகே தனி நாற்காலி போடப்பட்டிருந்தது. இந்த செயலுக்குதான் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி