×

பெரியார், எம்ஜிஆர் நினைவு நாள் தலைவர்கள் மலர் தூவி மரியாதை

சென்னை: பெரியார், எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவர்களது சிலை, படத்துக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தந்தை பெரியார் 45ம் ஆண்டு நினைவு நாள், எம்.ஜி.ஆர். 31ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தலைவர்களின் சிலை மற்றும் படத்திற்கு தலைவர்கள் மாலை மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார், எம்ஜிஆர் படத்திற்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் துணை பொது செயலாளர் மல்லை சத்யா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மக்கள் தொடர்பு அலுவலர் நன்மாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அமமுக சார்பில் அதன் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன், பழனியப்பன் உள்ளிட்ட உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய நீதிக்கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கட்சியின் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதன் பொது செயலாளர் தீபா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது கணவர் மாதவன் உடன் இருந்தார்.  

சமத்துவ மக்கள் கட்சி தலைமை   அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி   மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாநில   துணை பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர், மாநில இளைஞரணி இணைச் செயலாளர்   டி.மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தி.க. சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வி.சி.க. தலைவர் திருமாவளவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே. ரங்கராஜன் எம்பி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Periyar ,leaders ,MGR Memorial Day , Periyar, MGR
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...