×

குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ள 2,500 ஏரிகள் பட்டியலை ஜனவரி முதல்வாரம் தர வேண்டும்: பொறியாளர்களுக்கு உத்தரவு

சென்னை: குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ள 2,500 ஏரிகள் பட்டியலை ஜனவரி முதல்வாரத்தில் தர வேண்டும் என்று தமிழக அரசு பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ்  ஏரிகளை புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 1511 சிறியது முதல் பெரிய ஏரிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ரூ.300  கோடி செலவில் 1513 ஏரிகள் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுக்க, முழுக்க விவசாயிகள் சங்கம், ஆயக்கட்டுதாரர்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, பல்வேறு இடங்களில் சங்கங்கள்  அமைக்கப்பட்டு, விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்புகள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் புனரமைப்பு பணிகள் முடிந்து விட்டது. 100க்கும் மேற்பட்ட குளங்களில் மழை காரணமாக  தண்ணீர் இருப்பதால், அங்கு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது.

எனவே, அந்த குளங்களில் தண்ணீர் குறைந்த பிறகு புனரமைப்பு பணி தொடங்கவும் விவசாய அமைப்பகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில், மூன்றாவது கட்டமாக ரூ.500 கோடி செலவில் 2,500 ஏரிகளை  புனரமைக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள்,  கண்காணிப்பு பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் தற்போது நடந்து வரும் குடிமாரத்து பணிகளின் நிலை குறித்து பொறியாளர்களிடம் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மூன்றாவது  கட்டமாக குடிமராமத்து திட்ட பணிகளை விரைந்து தொடங்கும் வகையில் புனரமைக்கப்படவுள்ள ஏரிகளின் பட்டியலை ஜனவரி முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து, அந்த ஏரி புனரமைப்பு பணிக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து குடிமராமத்து திட்டத்திற்கான ஏரிகள்  புனரமைப்பு பணியை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்திற்குள் ஏரிகள் புனரமைப்பு பணியை முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்தந்த மாவட்ட  கலெக்டர்களின் ஒப்புதல் பெற்று புனரமைக்கப்படவுள்ள ஏரிகள் பட்டியலை விரைந்து தாக்கல் செய்ய வேணடும் என்று பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lakes , Livestock project, lake, engineers
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...