சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் இனிமேல் யாருக்கும் சிலை திருடும் எண்ணம் வராது என்று கருத்தும் தெரிவித்துள்ளது. தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் 230 சிலைகளும், கிரண் ராவ் வீட்டில் 23 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் ஆகியோரின் பாஸ்போர்ட்டுகளை அவர்களின் வக்கீல்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.
ரன்வீர் ஷா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் நீதிபதியிடம், தங்களிடம் இருந்த சிலைகளில் 91 சிலைகளுக்கான சான்றிதழ் தொல்பொருள் ஆராய்ச்சி துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள சிலைகளுக்கும் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்டது என்றார். இதே வாதம் கிரண் ராவ் தரப்பிலும் வைக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், நிபந்தனை முன் ஜாமீன் இருவருக்கும் வழங்கப்படுகிறது. ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோர் கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். அதன்பின்னர் தினமும் காலை 10.30 மணிக்கு திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் மறு உத்தரவு வரும் வரை ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். இதையடுத்து, கிரண் ராவின் உணவகத்தில் பணியாற்றும் தீனதயாளன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரன்வீர் ஷாவுக்கு தரப்பட்ட நிபந்தனையுடன் தீனதயாளனுக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி