×

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 100 நாள் முடிந்தது

புதுடெல்லி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நேற்றோடு 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதனை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கடிதம் தொடர்பாக இதுவரை அவரது தரப்பில் இருந்து எந்த பதிலோ அல்லது விளக்கமோ கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தியும், தமிழக கவர்னர் விரைந்து தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உட்பட உலக நாடுகளில் இருந்தும் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தொடர்ந்து கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது மேகதாது அணை, கஜா புயல் மற்றும் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,” ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக எந்த ஒரு மனுவும் மத்திய அரசிடம் நிலுவையில் கிடையாது.

இதுகுறித்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசுக்கு கடந்த ஏப்ரம் மாதமே பதில் அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. இதில் ராஜிவ்காந்தி கொலையின் போது அப்பாஸ் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தற்போது காலாவதியாக விட்டது. இதனை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை 7 பேர் விடுதலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நேற்றோடு 100 நாட்கள் முடிந்து விட்டது. ஆனால் அதுகுறித்து எந்த ஒரு துரித நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் இந்த பிரச்னை எழுப்பப்படும் போதெல்லாம் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்ற ஒரே வார்த்தையை மட்டும் தமிழக அரசு  திரும்ப திரும்ப தெரிவித்து வருகிறது. இத்தகைய செயலால் தமிழக சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானம் காற்றில் பறந்ததாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perarivalan , Seven people, including Perarivalan, passed the 100-day resolution
× RELATED பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை!!