×

இலங்கையில் 51 நாள் அரசியல் குழப்பம் தீர்ந்தது பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்: புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்பு

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் பதவி ஏற்றார். இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. அதிபர் சிறிசேனாவுக்கு எதிரான படுகொலை சதி விஷயத்தைக் கூட ரணில் கண்டுக்கொள்ளவில்லை என  குற்றம் சாட்டப்பட்டது. இதனால் கோபம் அடைந்த அதிபர் சிறிசேனா, ரணிலை பிரதமர் பதவியில் இருந்து  கடந்த அக்டோபர் 26ம் தேதி நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். ஆனால், 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேயால்  பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை.இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரணில் மனு செய்தார். அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு  உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ராஜபக்சே பிரதமராக செயல்படவும், இலங்கை நீதிமன்றம் தடை விதித்தது.இலங்கை நாடாளுமன்றம் ஐக்கிய தேசியக் கட்சி எம்பி சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் 117 பேர் ரணிலுக்கு ஆதரவாக  ஓட்டளித்தனர். இதனால், நம்பிக்கை தீர்மானத்தில் ரணில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்கும்படி அதிபர் சிறிசேனாவை சஜித் பிரேமதாசா வலியுறுத்தினார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 13ம் தேதி தீர்ப்பளித்தது.

அதில், ‘நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என நீதிபதிகள் கூறினர்.கடைசிக் கட்ட முயற்சியாக, தனக்கு எதிராக பிறப்பித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராஜபக்சே மனு செய்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம். ராஜபக்சேவின் அப்பீல் மனுவை  ஜன.16ம் தேதி முதல் விசாரிப்பதாக கூறியது.இந்நிலையில், பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து ரணிலுடன், அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் போனில் பேசினார். இதைத் தொடர்ந்து, பிரதமராக ரணில் நேற்று மீண்டும்  பதவி ஏற்றார். 30 உறுப்பினர்கள் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranil ,Cabinet ,Sri Lanka , political confusion , Sri Lanka, Ranil takes , new PM
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...