புதுடெல்லி:‘கடற்படையில் 56 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்’’ என கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா கூறியுள்ளார். அவர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய கடல் பரப்பை, கடற்படை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. கடற்படையில் புதிதாக 56 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களை சேர்ப்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம். இத்திட்டத்தின் கீழ் 32 கப்பல்கள் தற்போது கட்டுமான பணியில் உள்ளன. மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை கடற்படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில், சுமார் 2.5 லட்சம் மீன்பிடி படகுகளை தானாக அடையாளும் காணும் டிரான்பாண்டர்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளது. 5 ரோந்து படகுகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸ் நேவல் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் தாமதமாவதால் இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருகிறோம். செசல்ஸ் தீவில் கடற்படை தளம் அமைப்பது பற்றி அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மாலத்தீவில் தற்போது சாதகமான அரசு ஆட்சியில் உள்ளது. இரு நாடுகளும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தவுள்ளன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி