சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கம் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ரவுடி ஸ்ரீதர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரப்பாக்கம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளி வந்த ஸ்ரீதர் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் நேற்று மதுராந்தகம் சென்று மற்றொரு ரவுடியை சந்திக்க சென்றனர். அப்போது ஏற்கனவே கொல்லப்பட்ட பெருமாளின் ஆட்கள் ரவுடி ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் இருவரையும் காரில் கடத்தி சென்றனர். இதையடுத்து கடத்தி செல்லப்பட்ட ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை ஊரப்பாக்கம் அருகே உள்ள விஜிபி திடலில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மாமண்டூர் பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட படாளம் ரவுடி ராமமூர்த்தியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது பெருமாள் கொலைக்கு பழி வாங்குவதற்காக ஸ்ரீதரை கொலை செய்து ஊரப்பாக்கத்தில் வீசியதாக ராமமூர்த்தி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தியை கைது செய்த போலீசார் ஊரப்பாக்கத்தில் காட்டுப்பகுதியில் கிடந்த ஸ்ரீதர் உடலைக் கைப்பற்றினர். தொடர்ந்து ரவுடி ராமமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீதருடன் வந்த நண்பரையும் கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதருடன் வந்த நபர் யார் என்றும் அவரது உடலைத் தேடும் பணியில் கூடுவாஞ்சேரி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி