சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். கொளத்தூர் பகுதியை சேர்ந்த 3 பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார். அதேபோல் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உதவும் வகையில், ரூ.14 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்தார். நவீன முறையில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்கான செலவுகள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகம் மூலமாக மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை மேம்படுத்த உதவியாக இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அந்த உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூலகத்திற்கு 1,500 புதிய புத்தகங்களை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக பந்தர்கார்டன் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில், 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான கூடுதல் வகுப்புகளை கொண்ட கட்டிடங்களை கட்டுவதற்கான பணிகளை அவர் துவக்கி வைத்தார். இதுபோன்று கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி