×

தண்டையார்பேட்டையில் மர்மநபர்கள் கைவரிசை டாஸ்மாக் கடையில் துளையிட்டு ரூ2.80 லட்சம் துணிகர கொள்ளை

சென்னை:தண்டையார்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் துளையிட்டு ரூ2.80 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்  தண்டையார்பேட்டை பஸ் டெப்போ எதிரே  அரசு டாஸ்மாக் கடை உள்ளது.  இங்கு,  ராயபுரம் பழைய ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த கணேசன் (45) சூப்பர்வைசராக உள்ளார். இவருடன் 4 பேர் விற்பனையாளராக உள்ளனர். நேற்று முன்தினம் விற்பனை பணத்தை கல்லாப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு இரவு 10 மணிக்கு கடையை பூட்டிச்சென்றனர். நேற்று காலை  கடையையொட்டியுள்ள பாரை திறக்க ஊழியர்கள் வந்தபோது,  கடையின் பின்பக்க சுவற்றில் துளை போடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து  சூப்பர்வைசர் கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, கல்லா பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த ரூ2.80 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் கணேசன் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரித்தனர். பாரில் உள்ள ஜன்னலை உடைத்து  உள்ளே புகுந்த மர்ம நபர்கள், டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.  இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஜன்னல், சுவர் மற்றும் கடையில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்தனர். இதுபற்றி பார் ஊழியர்கள், டாஸ்மாக் கடை ஊழியர்களிடம்  போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த 5 மாதத்துக்கு முன்பு  டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளை போட்டு  பணம் மற்றும்  மதுபானங்களை திருடி குடித்துவிட்டு சாலையில் போட்டு உடைத்துவிட்டு சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tondiarpet , 2.80 lakh,Venture,robbery ,Tondiarpet
× RELATED தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில்...