டெல்லி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகிறது. கஜா புயல் சேதங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். காலையில் பிரதமரை சந்தித்து தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை பிரதமரிடம் எடுத்துக் கூறி, புயல் நிவாரணமாக 15000 கோடி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறோம். இப்போது இடைக்கால நிவாரணமாக உடனடியாக 1500 கோடி ரூபாய் வழங்கும்படி கேட்டுக்கொண்டோம்.
மேலும் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, சேத விவரங்களை உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். உடனடியாக மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார். கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என புயல் நிவாரணமாக 15000 கோடி வழங்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நாளை(நவ.,23) மாலை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரை சந்தித்த பின்னர் இந்த குழுவின் பணிகள் துவங்கும். குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் மற்றும் அதிகாரிகள் நவ.25, 26 ல் புயல் பாதித்த டெல்டா பகுதியில் ஆய்வு செய்கின்றனர். நவ.27 ல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி